Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி முழுப் பாடல்
Kandhar andhAdhi - Complete Poem
Kandhar andhAdhi - Complete Poem    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   PDF   தேடல் 
contents alphabetical index  numerical index   PDF  search
previous page next page
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

     நூல்

     திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
     திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
     திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
     திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.    ...      1 

     செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
     செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
     செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
     செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.    ...      2 

     சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
     சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
     சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
     சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.    ...      3 

     தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
     தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
     தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
     தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.    ...      4 

     தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்க முன்போ
     தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
     தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
     தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனலே.    ...      5 

     செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
     செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த
     செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
     செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே.    ...      6 

     திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
     திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
     திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே
     திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.    ...      7 

     சீதனங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
     சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
     சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
     சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.    ...      8 

     சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
     சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
     சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
     சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே.    ...      9 

     திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
     திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
     திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
     திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.    ...      10 

     திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
     திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
     திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
     திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.    ...      11 

     சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
     சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
     சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
     சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.    ...      12 

     தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்த விண்ணோர்
     தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
     தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
     தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.    ...      13 

     செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
     செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
     செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
     செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.    ...      14 

     திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
     திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
     திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
     திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.    ...      15 

     சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
     சேவற் கொடியுங் கொடியகண் டாய்ததினை சூழ்புனத்துச்
     சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
     சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.    ...      16 

     சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
     சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
     சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
     சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.    ...      17 

     தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
     தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
     தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
     தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.    ...      18 

     சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
     சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
     சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
     சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.    ...      19 

     செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
     செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
     செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
     செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.    ...      20 

     சிந்தா குலவ ரிசைப்பேரு மூருநஞ் சீருமென்றோர்
     சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
     சிந்தா குலவரி மாயுர வீர செகமளப்பச்
     சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.    ...      21 

     செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
     செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
     செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
     செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.    ...      22 

     தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
     தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
     தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
     தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.    ...      23 

     செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
     செகம்புர வாதிங்ஙன் செய்வதென் னோமயல் செய்யவன்பு
     செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
     செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.    ...      24 

     தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
     தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
     தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
     தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.    ...      25 

     செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
     செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
     செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
     செவிக்குன்ற வாரண வள்ளிபொற் றாண்மற்றென் றேடுவதே.    ...      26 

     தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
     தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
     தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
     தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.    ...      27 

     சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
     சிக்குறத் தத்தை வடிவே லனார்சில ரன்பர்செந்தாள்
     சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்
     சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே.    ...      28 

     திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
     திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
     திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
     திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.    ...      29 

     தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
     தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
     தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
     தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே.    ...      30 

     தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
     தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
     தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
     தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே.    ...      31 

     சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்
     சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்
     சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா
     சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே.    ...      32 

     சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
     சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
     சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
     சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே.    ...      33 

     திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்
     திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்
     திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்
     திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.    ...      34 

     திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
     திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
     திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு
     திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே.    ...      35 

     செச்சைய வாவி கலயில்வல்வாயிடைச் சேடனிற்கச்
     செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
     செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்
     செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே.    ...      36 

     சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
     சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
     சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
     சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே.    ...      37 

     சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்
     சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க் குப்பரி
     சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
     சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.    ...      38 

     தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
     தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
     தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
     தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே.    ...      39 

     சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
     சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
     சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
     சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே.    ...      40 

     தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
     தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
     தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
     தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே.    ...      41 

     தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
     தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
     தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
     தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே.    ...      42 

     செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
     செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
     செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்
     செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே.    ...      43 

     சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
     சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
     சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
     சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே.    ...      44 

     தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
     தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
     தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
     தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே.    ...      45 

     செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
     செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
     செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
     செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.    ...      46 

     திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
     திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்
     திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
     திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே.    ...      47 

     சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
     சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
     சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
     சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.    ...      48 

     சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
     சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
     சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
     சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே.    ...      49 

     சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
     சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
     சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி
     சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே.    ...      50 

     சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா
     சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
     சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
     சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே.    ...      51 

     தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன் செவிபத்
     தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
     தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்
     தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே.    ...      52 

     தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிர முந்நீர்
     தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்
     தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
     தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே.    ...      53 

     திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
     திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
     திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
     திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.    ...      54 

     தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
     தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
     தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
     தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே.    ...      55 

     தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
     தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
     தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்
     தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.    ...      56 

     தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
     தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
     தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
     தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே.    ...      57 

     சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
     சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
     சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
     சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே.    ...      58 

     சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி
     சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்
     சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்
     சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே.    ...      59 

     செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னங் செல்வர்க்கிடச்
     செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
     செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
     செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே.    ...      60 

     திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
     திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
     திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
     திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே.    ...      61 

     திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்
     திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
     திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே
     திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே.    ...      62 

     தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
     தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
     தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
     தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே.    ...      63 

     சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
     சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
     சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
     சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே.    ...      64 

     திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
     திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
     திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
     திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ்சீகரமே.    ...      65 

     சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
     சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
     சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
     சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே.    ...      66 

     சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
     சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
     சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
     சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே.    ...      67 

     சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
     சேகர வாரண மேவும் புயாசல தீவினையின்
     சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
     சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே.    ...      68 

     சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
     சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்
     சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையே
     சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே.    ...      69 

     சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
     சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
     சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
     சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே.    ...      70 

     திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு
     திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்
     திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்
     திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே.    ...      71 

     தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்
     தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்
     தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்
     தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே.    ...      72 

     திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
     திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
     திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
     திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.    ...      73 

     சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
     சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
     சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
     சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே.    ...      74 

     செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலத் தீதலருஞ்
     செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்
     செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
     செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே.    ...      75 

     செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
     செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
     செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
     செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே.    ...      76 

     தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
     தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
     தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
     தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே.    ...      77 

     திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
     திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
     திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
     திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே.    ...      78 

     செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை
     செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்
     செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்
     செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே.    ...      79 

     சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்
     சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்
     சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்
     சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே.    ...      80 

     சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
     சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
     சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
     சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே.    ...      81 

     தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
     தென்றலை யம்பு மின்கோ மருக செழுமறைதேர்
     தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
     தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.    ...      82 

     தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
     தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
     தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
     தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே.    ...      83 

     சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
     சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
     சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
     சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே.    ...      84 

     சேர்ந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
     சேர்ந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
     சேர்ந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
     சேர்ந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே.    ...      85 

     சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
     சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
     சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச்
     சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே.    ...      86 

     திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
     திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
     திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
     திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே.    ...      87 

     செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
     செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்
     செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
     செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே.    ...      88 

     சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்
     சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்
     சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்
     சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே.    ...      89 

     சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
     சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
     சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
     சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே.    ...      90 

     திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
     திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
     திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
     திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே.    ...      91 

     சேடி வணங்கு வளைத்தோ ளனெப் புணர் சேயவட
     சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
     சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
     சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே.    ...      92 

     செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
     செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
     செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்
     செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே.    ...      93 

     சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
     சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
     சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
     சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே.    ...      94 

     திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
     திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
     திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
     திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே.    ...      95 

     திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
     திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
     திருக்கையம் போருகக் கைந்நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
     திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே.    ...      96 

     சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
     சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
     சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
     சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.    ...      97 

     சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
     சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
     சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
     சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.    ...      98 

     தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
     தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
     தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
     தீவினை யற்ற வடியார்க் கருள்பெறுஞ் செல்வனுக்கே.    ...      99 

     செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
     செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
     செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்த செல்வி
     செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே.    ...      100 

     ... கந்தரந்தாதி முற்றிட்டு.

கந்தர் அந்தாதி - முழுப் பாடல்
Kandhar andhAdhi - Complete Poem
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index  numerical index   PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi Complete Poem

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]