Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   7 - கயமுகன் வதைப் படலம்   next padalamkayamugan vadhaip padalam

Ms Revathi Sankaran (5.16mb)




(ஏகா நிற்புழி)

ஏகா நிற்புழி ஏந்தல் கீழ்த்திசை
     மாகா வற்கொள் மதங்க மாமுகன்
          மீகான் ஒப்ப வியன்க லத்தினுக்
               காகா யத்தின் அமர்ந்து போற்றுவான். ......    1

(நூற்றுப் பத்து)

நூற்றுப் பத்து நுவன்ற தோன்முகன்
     மூற்றைக் கையினன் மொய்ம்பி ராயிரன்
          சீற்றத் துப்புறு தீய சிந்தையான்
               கூற்றத் துக்கொரு கூற்ற மேயனான். ......    2

(பொன்னார் ஏம)

பொன்னார் ஏம புரத்து வைகலும்
     மன்னாய் வாழ்பவன் மாறு கொண்டுதன்
          முன்னா வெய்தி முனிந்து போர்செய
               ஒன்னார் இன்றி உளங்கு றைந்துளான். ......    3

(கருமே கங்கள்)

கருமே கங்கள் கறித்து வாரியுண்
     டுருமே றோடு முரற்ற ஓச்சுவான்
          பெருமே தக்க பவஞ்செய் பெற்றியான்
               செருமேல் கொண்டிடு சிந்தை பெற்றுளான். ......    4

(மஞ்சார் வேழம்)

மஞ்சார் வேழம் வனத்தில் வல்லுளி
     எஞ்சா வெவ்வரி யாளி வல்லியம்
          அஞ்சா ராயிர மங்கை கொண்டுணாச்
               செஞ்சோ ரிப்புனல் சிந்தும் வாயினான். ......    5

(காசைப் போது)

காசைப் போது கடுத்த மெய்யர்தென்
     னாசைக் காலரொ ராயிரத் தர்தம்
          பாசத் தோடு பயின்று சேர்ந்தென
               வீசித் தூங்கும் வியன்று திக்கையான். ......    6

(வாணாள் அஃகினன்)

வாணாள் அஃகினன் மாயும் எல்லையான்
     ஏணால் அத்திசை ஏகும் வீரனைக்
          காணா நின்று கனன்று சாலவுஞ்
               சேணான் இன்னன செப்பி ஏகுவான். ......    7

(மிக்கார் காவல்)

மிக்கார் காவல் விலங்கி நீயிவட்
     புக்காய் மாயை புகன் றுளாய்கொலோ
          அக்கால் தானுமெம் மாணை நீங்கியே
               எக்கா லத்தினும் ஏக வல்லதோ. ......    8

(வறியா ராகி)

வறியா ராகி மயங்கும் வானவச்
     சிறியார் வைகிய சீரில் ஊரெனக்
          குறியா வந்தனை கோதில் இந்நகர்
               அறியா யோநம தாணை ஆற்றலே. ......    9

(மூண்டே குற்ற)

மூண்டே குற்றனென் மொய்சி னத்தினேன்
     மாண்டே போயினை வல்லை நீயினி
          மீண்டே போந்திறம் இல்லை மேலுனக்
               கீண்டே மாயவி ழைத்த எல்லையே. ......    10

(சூராள் கின்றதொர்)

சூராள் கின்றதொர் தொல்லை மாநகர்
     சேரா நின்றனை சீறு கேசரி
          பேரா எல்லையொர் பீடின் மான்பிணை
               ஆராய் தற்குவ ருங்கொல் ஆற்றலால். ......    11

(தொடுநே மிக்கடல்)

தொடுநே மிக்கடல் துண்ணெ னக்கடந்
     திடைசேர் கின்ற இலங்கை நீங்கியே
          கடிதே இந்நகர் காண உன்னியே
               அடைவாய் தேவர்க ணத்து ளாரைநீ. ......    12

(திருத்தங் கண்ண)

திருத்தங் கண்ணகல் தேவர் தம்முளும்
     விருத்தன் போலும் மிகத்து ணிந்துநீ
          ஒருத்தன் போந்தனை ஒன்றொர் வாளொடே
               வரத்தென் இவ்விடை மாயை கற்றுளாய். ......    13

(ஆலா லத்தை)

ஆலா லத்தை அயின்ற நம்பனோ
     மாலா னோவன சத்தில் அண்ணலோ
          பாலார் தந்தி படைத்த கள்வனோ
               மேலார் இங்குனை விட்ட தன்மையார். ......    14

(சுற்றா நின்றனை)

சுற்றா நின்றனை சூழ இந்நகர்
     ஒற்றாய் வந்தனை போலும் உன்றனை
          மற்றார் உய்த்தனர் வந்த தென்கொலோ
               விற்றாய் நின்னுயிர் எங்கண் உய்திநீ. ......    15

(சிறையிற் பட்டுழல்)

சிறையிற் பட்டுழல் தேவர் செய்கையை
     அறிகுற் றிந்திரன் ஆளை யாகியே
          நெறியிற் போக நினைந்து ளாய்கொலாங்
               குறுகுற் றாயிது வுங்கு றிப்பதோ. ......    16

(விண்டோ யுங்கனல்)

விண்டோ யுங்கனல் மேவும் எல்லையின்
     மண்டோய் பூளை மருத்தன் உய்த்தெனப்
          பண்டே நொய்யை படுந்தி றத்திவட்
               கொண்டே வந்தது கொல்லும் வல்வினை. ......    17

(முன்னந் நம்பணி)

முன்னந் நம்பணி முற்று மாற்றியே
     கின்னங் கொண்டு கரந்த கீழ்த்திசை
          மன்னன் பாலுறு வாருள் அன்றுநீ
               இன்னும் மஞ்சலை என்னை யெண்ணலாய். ......    18

(கொல்லா நிற்பதொர்)

கொல்லா நிற்பதொர் கூற்ற மேயெனச்
     செல்லா நின்றிடு திண்ணி யேன்முனம்
          நில்லாய் எங்கடா நீங்கு வாயெனா
               ஒல்லான் ஓதி உரப்பி யேகினான். ......    19

(வன்றாள் கொண்ட)

வன்றாள் கொண்ட மதக்க யாசுரன்
     சென்றான் இன்னன செப்பி இம்மொழி
          நன்றால் என்று நகைத்து நோக்கியே
               நின்றான் வாகை நெடும்பு யத்தினான். ......    20

(ஓவா திவ்வகை)

ஓவா திவ்வகை யோதி முன்வருந்
     தீவா யோன்எதிர் சென்று வல்லையிற்
          சாவா யென்னிடை சார்ந்து ளாய்கொலாம்
               வாவா என்றனன் வாகை மொய்ம்பினான். ......    21

(வானோர் அஞ்ச)

வானோர் அஞ்ச வருங்க யாசுரன்
     தானோர் குன்று தனைப்ப றித்திடா
          ஊனோ டுன்னுயி ருண்ணு மீதெனா
               வானோன் மைந்தன்முன் னார்த்து வீசினான். ......    22

(விண்டோய் மேனி)

விண்டோய் மேனி வியன்க யாசுரன்
     கொண்டோர் கையில் விடுத்த குன்றது
          வண்டோ லம்புரி மாலை மொய்ம்பினான்
               திண்தோண் மீமிசை செவ்வ ணுற்றதே. ......    23

(வேழத் தோன்)

வேழத் தோன்முகன் விட்ட பூதரம்
     பாழித் தோள்மிசை பட்ட காலையில்
          வாழிப் பூதியின் வட்டு விண்டெனப்
               பூழித் தாகி உடைந்து போயதே. ......    24

(பொடியுங் காலெ)

பொடியுங் காலெதிர் புக்க தீயவன்
     மிடல்கொண் டுற்றிடு வீரன் ஆற்றல்கண்
          டுடலுந் திண்சின முற்றொ ராயிரம்
               படருங் குன்று பறித்தன் மேயினான். ......    25

(பறியா நின்ற)

பறியா நின்ற பகட்டு மாமுகன்
     நெறிவீழ் கின்ற நெடுங்கை சுற்றினான்
          இறைசேர் மேரு இருந்த கோடெலாங்
               கறைசேர் காலவர் கட்டெ ழுந்தபோல். ......    26

(பத்தாம் நூறு)

பத்தாம் நூறு படுத்த வேலையுள்
     மத்தா குற்றன வாசு கித்தொகை
          மொய்த்தார் வன்றலை முன்பு சூழ்ந்தெனக்
               கைத்தா மால்வரைக் காட்சி மிக்கவே. ......    27

(துண்ணென் றேக)

துண்ணென் றேகயா சூரன் நூறுபத்
     தெண்ணுந் தொல்கிரி யாவும் எம்பிரான்
          கண்ணின் றோன்விடு காமர் காளைமேல்
               விண்ணங் கான்றென ஆர்த்து வீசினான். ......    28

(பாடார் பல்கிரி)

பாடார் பல்கிரி பற்றி வீசலும்
     ஈடார் வெம்புலி யாளி கேசரி
          கோடார் தந்திகள் கோடி கோடிகள்
               வீடா ஆர்ப்பொடு விம்மி வீழ்பவே. ......    29

(கேடாய் மன்னர்)

கேடாய் மன்னர் கிடப்ப ஆங்கவர்
     வீடா ஆக்கமி சைந்து ளாரெனப்
          பாடா வண்டு பராரை மால்வரை
               ஊடார் தேன்கள் உகுப்ப உண்டவே. ......    30

(வேறா கும்பல)

வேறா கும்பல வெற்பி டந்தொறும்
     ஊறா நின்றுல வுற்ற வான்புனல்
          மாறா மல்கவிழ் வுற்று வல்லைபேர்
               ஆறா கிக்கட லென்ன ஆர்த்ததே. ......    31

(வரைவீழ் பூம்பு)

வரைவீழ் பூம்புனல் மாந திக்கணே
     இரையா மாக்க ளியாவும் வீழ்தலாற்
          திரைசேர் வாரிகள் சென்று சேணெழீஇ
               விரைவால் வெய்யவன் வெப்பம் நீக்குமே. ......    32

(பேசுஞ் சீரிவை)

பேசுஞ் சீரிவை பெற்ற வெற்பெலாம்
     ஈசன் தூதுவன் முன்ன ரெய்தின
          பாசஞ் சுற்றிய பம்ப ரத்தொகை
               வீசுங் காலை சுழன்று வீழ்வபோல். ......    33

வேறு

(சுடர்ப்பெ ருங்க)

சுடர்ப்பெ ருங்கதிர் ஆதவன் துண்ணெனக் கரப்ப
     அடுக்கல் ஆயிரம் இன்னவா றொருதலை யாகக்
          கடற்பு குங்கண முகிலென வருதலுங் கண்டான்
               தடக்கை வேலுடை அண்ணல்தாள் முன்னினன் தமியோன். ......    34

(நிற்கு மெல்லையின் வெங்)

நிற்கு மெல்லையின் வெங்கொலைத் தொழின்முறை நிரம்பக்
     கிற்கும் வெய்யவன் விடுத்திடும் ஆயிரங் கிரியும்
          பற்கன் மால்வரை காப்பவன் தன்மிசை பழிதீர்
               அற்கன் மேல்வரும் எழிலிகள் எனஅடைந் தனவே. ......    35

வேறு

(மறுவரை யாத)

மறுவரை யாத திங்கள் வார்சடைக் கடவுள் நல்க
     அறுவரை அனையாப் பெற்றோன் அருளினால் ஐயன் நிற்ப
          உறுவரை பத்து நூறும் ஒருங்குமா யுற்று மற்றோர்
               சிறுவரை தன்னில் யாவுஞ் சிதறியே உடைந்த வன்றே. ......    36

(தெளிதரு வீரன்)

தெளிதரு வீரன் தன்மேற் செறிந்திடும் அடுக்கல் யாவும்
     விளிவொடு மாய்ந்த வன்றி விளைத்தில வேறங் கொன்றும்
          வளநனி சுருங்கி வானம் வறந்தநாள் வெளிற்றுக் கொண்மூக்
               கிளர்வன பயனின் றாகிக் கேடுபட் டுடையு மாபோல். ......    37

(மட்பகை வினை)

மட்பகை வினைஞ ரானோர் வனைதரு கலங்கள் முற்றுந்
     திட்பமொ டமர்ந்த கற்றூண் சேர்ந்துழிச் சிதறு மாபோல்
          கொட்புறு புழைக்கை வெய்யோன் குறித்தெறி பிறங்கல் யாவும்
               ஒட்பம தடைந்த வீரன் மிசைபட உடைந்த அன்றே. ......    38

(விறல்கெழு புயத்தி)

விறல்கெழு புயத்தி னான்மேல் விடுத்திடு கிரிகள் யாவும்
     வறிதுபட் டிடலுங் காணா மால்கரி முகத்தன் நின்றான்
          அறநெறி யொருவி மொய்ம்பால் ஆற்றிய வெறுக்கை யாவும்
               பிறர்கொள வுகுத்தி யாதும் ஊதியம் பெறுகி லார்போல். ......    39

(கண்டுவிம் மிதத்த)

கண்டுவிம் மிதத்த னாகிக் கயாசுரன் முனிந்தோர் தண்டந்
     திண்டிறன் மொய்ம்பன் தன்மேற் செலுத்தலும் அதனைக் காணா
          ஒண்டழல் புரையும் ஒள்வாள் உறைகழித் தொல்லை வீழத்
               துண்டம தாக்கி யன்னோன் எதிருறத் துன்ன லுற்றான். ......    40

(மத்தவெங் கயமா)

மத்தவெங் கயமாந் தீயோன் வாகையந் தடந்தோள் அண்ணல்
     மெய்த்தனி ஆற்றல் காணா விழுத்தகு பனைக்கை யோச்சிப்
          பத்துநூ றான சாலப் பழுமரம் பறியா ஏந்தி
               உய்த்திட ஒருதன் வாளால் ஒய்யெனச் சிந்தி ஆர்த்தான். ......    41

(காயெரி கலுழும்)

காயெரி கலுழும் வெங்கட் கயாசுரன் விடுவான் பின்னுஞ்
     சேயுயர் வரைபல் வேறு தெரிந்தனன் பறிக்கும் எல்லை
          நாயகன் தூதன் காணா நாந்தகங் கொடுபோய் அன்னான்
               ஆயிர மாகி யுள்ள புழைக்கையும் அறுத்தான் அன்றே. ......    42

(அறுத்தலுங் கவன்று)

அறுத்தலுங் கவன்று தீயோன் ஆயிரத் திரட்டி கையுஞ்
     செறித்திவன் தன்னைப் பற்றித் திற்றியாக் கொள்வ னென்றே
          குறித்தனன் வளைப்ப வாளாற் கொம்மென ஆற்றல் வீரன்
               தறித்தனன் ஒருசார் வந்த ஆயிரந் தடக்கை முற்றும். ......    43

(செற்றமால் கரியின்)

செற்றமால் கரியின் பேரோன் திண்கையா யிரமும் வீட்ட
     மற்றையா யிரங்கை யாலும் வாகையஞ் செம்மல் மார்பின்
          எற்றினான் எற்றும் எல்லை எல்லையில் வெகுளி யெய்தி
               அற்றுவீழ்ந் திடவே வாளால் அவையெலாம் அடுதல் செய்தான். ......    44

(கொலைகெழு தறு)

கொலைகெழு தறுகண் நால்வாய்க் குஞ்சர முகத்து வெய்யோன்
     நிலைகெழு பாணி முற்றும் நீங்கியீ ரைந்து நூற்றுத்
          தலைகெழு நிலைமைத் தாகித் தண்சினை பலவு மல்கி
               அலைகெழு வீழ்போய் உற்ற ஆலமே போல நின்றான். ......    45

(பாணிகள் இழந்து)

பாணிகள் இழந்து நின்ற பகட்டுடை வதனத் தீயோன்
     நாணினன் இவனை அட்டு நம்முயிர் துறத்தும் என்னா
          மாணறு மனத்திற் கொண்டு மற்றொழின் முன்னித் தோளால்
               தாணுவின் கயிலை காப்போன் தடம்புயந் தாக்கி ஆர்த்தான். ......    46

(ஐயன தொற்றன்)

ஐயன தொற்றன் காணா ஆற்றலின் றாகி முற்றுங்
     கையினை இழந்து நின்றான் கடுங்கதிர் வாளின் வெம்போர்
          செய்யலன் இனியான் என்னாச் சிந்தைசெய் துறைவா ளோச்சி
               ஒய்யென அவன்றன் மார்பின் உதைத்தனன் ஒருதன் தாளால். ......    47

(உதைத்திடு கின்ற)

உதைத்திடு கின்ற காலை ஒல்லென அரற்றி வீழ்ந்து
     மதத்தினை யுறுக போல மால்கரி முகத்து வெய்யோன்
          பதைத்தனன் ஆவி சிந்திப் பட்டனன் பகிர்ந்த மார்பிற்
               குதித்திடு சோரி நீத்தங் குரைகடற் போய தன்றே. ......    48

(அவ்வியல் கண்டு)

அவ்வியல் கண்டு பல்லோர் அவுணர்கள் நமரே ஈண்டு
     தெவ்வியல் முறையின் நின்று செருவினை இழைப்பார் போலும்
          இவ்விவர் ஆடற் கேது என்கொலோ அறிதும் என்றே
               கவ்வையின் நெறிக டோறுங் காண்பது கருதிப் போந்தார். ......    49

(சென்றிடல் வீரன்)

சென்றிடல் வீரன் காணாத் தீயரென் செய்கை நோக்கிற்
     கன்றிவெஞ் சினமேற் கொண்டு கடுஞ்சமர் இழைப்பர் யானும்
          நின்றமர் புரிதல் வேண்டும் நிலைமையீ தென்றால் அம்மா
               இன்றொடு முடியுங் கொல்லோ இயற்றினும் இவர்போரென்றான். ......    50

(ஆரணந் தனக்கு)

ஆரணந் தனக்குங் காணா ஆதியங் கடவுள் சொற்ற
     பேரருண் மறந்தே இன்னே பீடிலார் தம்மோ டேற்றுப்
          போரினை யிழைத்து நிற்றல் புல்லிது புலமைத் தன்றால்
               சூருறை மூதூர் தன்னில் துன்னுவன் கடிதின் என்றான். ......    51

(எப்பெரு வாயில்)

எப்பெரு வாயில் சார வேகினும் அங்கண் எல்லாங்
     கைப்படை அவுணர் வெள்ளங் காவல்கொண் டுற்ற ஆற்றால்
          தப்பினன் சேறல் ஒல்லா தமியன்இப் படிவத் தோடு
               மெய்ப்பதி இதற்குச் செல்வன் வேற்றுரு வெய்தி யென்றான். ......    52

(கூற்றினை உறழும்)

கூற்றினை உறழும் வைவேற் குமரவேள் அருளால் ஈண்டோர்
     வேற்றுரு வதனைக் கொண்டு வெய்யராம் அவுண வீரர்
          போற்றுமிக் குணபால் வாய்தல் பொள்ளெனக் கடந்து பின்னர்
               மாற்றலன் ஊரிற் செல்வன் என்றனன் வாகை மொய்ம்பன். ......    53

(நொய்யதோர் அணு)

நொய்யதோர் அணுவின் ஆற்ற நுணுகியும் மேன்மை தன்னில்
     பொய்யில்சீர் பெருமைத் தாயும் பூரண மாகி வைகுஞ்
          செய்யதோர் குமரன் பொற்றாள் சிந்தைசெய் தன்பிற் போற்றி
               ஒய்யென அருளின் நீரால் ஓரணு வுருவங் கொண்டான். ......    54

(நுணுகுதன் னுணர்)

நுணுகுதன் னுணர்வே போல நோக்கருந் திறத்தால் தானோர்
     அணுவுருக் கொண்டு வீரன் அடுகளம் அதனை நீங்கி
          இணையறு குமரற் போற்றி எழுந்துவிண் படர்ந்து மூதூர்க்
               குணதிசை வாய்தல் நின்ற கோபுர மிசைக்கண் உற்றான். ......    55

ஆகத் திருவிருத்தம் - 3949



previous padalam   7 - கயமுகன் வதைப் படலம்   next padalamkayamugan vadhaip padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]