ArumugaKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

புலவர் பெருமான் நக்கீரர்
அருளிய
திருமுருகாற்றுப்படை

ThirumurugAtruppadai
by Poet Nakkeerar

Kaumara Chellam
திருமுருகாற்றுப்படை - 4 - திரு ஏரகம் (சுவாமிமலை)
ThirumurugAtruppadai - 4 - Thiru Eragam (SwAmimalai)
thirumurugatruppadai 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முகப்பு   அட்டவணை   முன்னுரை   நன்றி   தேடல்   முழுப்பாடல் 
 home   contents  PDF in English search
select previous page
select next page

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

Dr. Singaravelu Sachithanantham  

திருமுருகாற்றுப்படை 4 - திரு ஏரகம் [சுவாமிமலை]



 " இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது - - - - - - 177

 இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

 அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

 ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை - - - - - - 180

 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

 இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

 ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

 புலராக் காழகம் புலர் உடீஇ

 உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து - - - - - - 185

 ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

 நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

 விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து

 ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று ..." - - - - - - 189


தெளிவுரை:

"['வேதம்' போன்ற நூல்களைக்] ஓதல் [கற்றல்], ஓதுவித்தல் [கற்பித்தல்],
வேட்டல் [வேள்வி, அல்லது யாகம், செய்தல்], வேட்பித்தல்
[ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல்], ஏற்றல்
[மற்றவர்களிடமிருந்து பொருளைத் தானமாகப் பெறுதல்], ஈதல்
[மற்றவர்களுக்குப் பொருளைத் தானமாகக் கொடுத்து உதவுதல்] ஆகிய
ஆறுவகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்களாகவும்;
தாய்-தந்தையர் இருவரின் குடும்பமும் நல்ல குடும்பம் என
உலகத்தாரால் மதிக்கப்பெற்ற பழம்பெரும் குடியில்
தோன்றியவர்களாகவும்; தம் வாழ்நாளில் முதலாவது நாற்பத்தெட்டு
ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம் முழுவதும் 'பிரமச்சரியம்'
எனப்படும் திருமணமாகாத வாழ்வியலை மேற்கொள்பவர்களாகவும்;
அறம் பொருந்திய கோட்பாட்டினை உடையவர்களாகவும்; 'ஆகவனீயம்,
தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' எனப்படும் மூவகைத் தீயால் வேள்வி
செய்து பெறும் செல்வத்தை உடையவர்களாகவும்; இவ்வுலகில் [தம்
தாயின் வயிற்றிலிருந்து] இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு,
கல்வியறிவு, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும்
பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்களாகவும்;
ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தை கணித்து மற்றவர்களுக்குத்
தெரிவிப்பவர்களாகவும்; [ஒவ்வொரு புரியிலும்] மூன்று நூல்
இழைகளைத்கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது
நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிபவர்களாகவும்; நீராடிய
பின்னர் உலராத ஆடையையே அணிந்து ஈரமான அந்த ஆடை
உலரும்படிச் செய்பவர்களாகவும்; தலை உச்சி மீது தங்கள் இரு
கைகளையும் குவித்து இறைவனை வணங்குபவர்களாகவும்; 'சரவணபவ',
அல்லது 'குமாராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி, தம்
நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய
மலர்களைத் தூவி திருமுருகப்பெருமானை வழிபடுபவர்களாகவும்
விளங்கும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் திரு ஏரகத்திலும்
திருமுருகப்பெருமான் மனமகிழ்வோடு அமர்ந்திருக்கும் உரிமை
உடையவன், அதுமட்டுமன்று ..."

அரும்பத அகராதி:

இருமூன்று எய்திய இயல்பு = 'ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,
        வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை
        நிறைவேற்றும் பண்பு;
இருவர்ச்சுட்டிய = தாயும், தந்தையும் ஆகிய இருவரின் குலத்தின்,
        அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறிய;
அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு = 6x4 + 6x4 = 48
        ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம்;
முத்தீ = 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும்
        மூவகை வேள்வித் தீ;
இருபிறப்பாளர் = இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர்
        எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள்;
பொழுது அறிந்து நுவல = நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிக்க;
ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் = [ஒவ்வொரு புரியிலும்
        மூன்று இழைகளைக்கொண்ட] மூன்று புரிகளாலாகிய ஒன்பது
        இழைகளைக்கொண்ட பூணூல்;
புலராக் காழகம் புலர உடீஇ = உலராத ஆடையை உலரும்படி
        உடுத்தி;
உச்சிக்கூப்பிய கையினர் = தலை உச்சி மீது இரு கைகளையும்
        குவித்து வணங்குபவர்கள்;
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி = 'சரவணபவ',
        அல்லது 'குமாராயநம' என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரம்;
'விரைவுறு நறுமலர் ஏந்தி = நறுமணம் உடைய மலர்களைத் தூவி;
பெரிது உவந்து = மிகவும் மகிழ்ந்து;
ஏரகத்து உறைதலும் உரியன் = திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும்
        உரிமையுடைய திருமுருகப்பெருமான்.

திருமுருகாற்றுப்படை - 4 - திரு ஏரகம் (சுவாமிமலை)
ThirumurugAtruppadai - 4 - Thiru Eragam (SwAmimalai)
 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முன்னுரை   நன்றி   முழுப்பாடல் 
PDF in English
select previous page
select next page

ThirumurugAtruppadai - 4 - Thiru Eragam (SwAmimalai)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]