Sri SendhilAndavanKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
திருச்சிற்றம்பல நாடிகள்
திருச்செந்தூர் அகவல்


ThiruchittRampala
NAdigaL
ThiruchchendhUr Agaval
Murugan with Valli and Devayanai
 முகப்பு   PDF   தேடல் 
home search

 திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய  திருச்செந்தூர் அகவல்

ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக் (கு)
ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன் ..
பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு,
நற் பொருள் விளக்கும் ஞான தேசிகன் ..
பொய்வழிச் சமணப் புலையிருள் நீக்கிச்        ... 5
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி ..
முருகன், குமரன், மூவிரு முகன், மால்
மருகன், சிவனருள் மைந்தன், கந்தன்,
மலைமகள் பாலன், வயம்கிளர் வேலன்,
கலைபயில் புலவன், கார்த்தி கேயன்,        ... 10
வளைஒரு மருப்பு, வாரண முகவற் (கு)
இளையவன், குமரன், மயில்ஏறும் பெருமாள்,
சூரசங்காரன், சுப்பிர மணியன்,
வீரருள் வீரன், விரைகமழ் கடம்பன்,
சேந்தன், வள்ளி, தெய்வ யானை        ... 15
காந்தன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன்,
ஆயிர நாமத் (து) ஐயன், துய்யன்,
சேய், அருள் கோமான், சேவல் துவசன்,
வரம்கிளர் கருணைப் பரங்கிரி உறைவோன் ..
மாஇனம் விளங்கும் ஆவினன் குடியோன் ..        ... 20
நந் (து) ஊர் அலைவாய்ச் செந்தூர்க் கடவுள் ..
பாரகம் விளக்கும் ஏரகத் (து) அமர்வோன் ..
மால்அயன் இறைஞ்சும் சோலைமா மலையோன் ..
குன்றுதோறாடல் நன்றென மகிழ்ந்தோன் ..
பாசக் கங்குல் பசையறப் பருகி,        ... 25
நேசர்க் (கு) இன்ப நிறையொளி பரப்பித்
திருவளர் செலும்பொன் செந்தா மரைக்கு
மருவும்ஓர் சான்றாய் மலர்ந்தபொற் பதமும் ..
நினைப்பொடு மறப்பு நீங்கிடும் அதீதம்
அனைப்பர நாத மறையொலி அலம்பும்        ... 30
பாந்தள்அம் கடிகைப் பன்மணி இழைத்த
காந்துசெஞ் சுடர்க்கால் கழல்பரி புரமும் ..
கண்குளிர் கனகக் கவின்கிடந் (து) இலங்கும்
கிண்கிணி இசைக்கும் கிளர்திரு அரையும் ..
வட்டுடை வரிந்து தொட்டகூர் வாளும் ..        ... 35
கட்டுறு யோகப் பட்டிகைச் சிறப்பும் ..
இந்திரவில் இரண்டு எதிர்பொருத் துவபோல்
சுந்தர ஆழி சூட்டும் அங் குலியும் ..
மன்இரு முகிலால் மணிதரு நிதிசேர்
பன்னிரு கமல பாணியும் .. அவற்றிற்        ... 40
சூலமும், வேலும், துரோணமும், சரமும்,
பாலமும், குலிசமும், பரிசையும், வாளும்,
ஆழியும், மழுவும், அபயமும், வரதமும்,
சூழ முன் கைகள் துலங்குபொன் கடகமும்,
மந்தரம் தழுவும் வாசுகி அன்ன        ... 45
சந்ததம் மொய்ம்பு தழைத்தகே யூரமும் ..
பரிதிமண்டலம்போல் பதக்க (ம்) முத் தாரம்,
தருசரப் பணிகள் தயங்குபூண் மார்பும்,
அட்டிகை பணி, நல் அக் (கு) இரும் குவளை
விட்டொளி விரிக்கும் வியன்கந் தரமும் ..        ... 50
மூவிரு திங்கள் மூதிர்ந்தபூ ரணம்போல்,
மேவுசண் முகங்கள் விளங்குநல் பொலிவும்
முளரிமுந் நான்கு மூவிரு குமுதம்
வளர்மதி உதயத் (து) இடைவளர்ந் தனபோல்,
முகந்தொறும் கருணை உகந்தகண் களும் .. சீர்        ... 55
உகந்தபொன் குதலை ஒழுகுவாய் வனப்பும்
தொட்டபொன் குழைகள் தூக்குகுண்டலமும் ..
சுட்டியம், நுதலில் இட்டவெண் ணீறும்,
மன்இரு மகளிர் மாட் (டு) அலால், வணங்காச்
சென்னிசேர்ந் (து) ஒளிரும் சேகரச் சிறப்பும் ..        ... 60
மகபதி மகளும் வள்ளி அம் திருவும்,
சுகமணம் சூட்டும் தொங்கலும் கடம்பும் ..
கோதைசூழ் அன்னோர் கொங்கையால் பூசும்
ஏதமில் சுகந்த லேபனப் பூச்சும் ..
மரகதப் பொருப்பும் வயிரவான் பொருப்பும்        ... 65
நிரல்வலம் இடமார் நெடியபொன் கிரிபோல்,
அகிலமும் ஈன்ற அன்னையர் இருவர்
மகிழ்வுற இருபால் மன்னிவாழ்ந் (து) இருப்பப்
பன்னிறம் தளிர்க்கும் பச்சைவான் கிரிமேல்
துன்இரு கோடி சூரியர் உதித்தாங் (கு),        ... 70
அவரவர் அச்சம் அடுதிறல் மயூரக்
குரகதம் ஏறிக் குலவு காட்சியும் ..
கரந் (து) எனை ஆளும் கருணையால் புவிமேல்
சரம்தரு மானுடச் சட்டை சாத்தி,
அழியா ஒளிவந் (து) அழியா மொழியை        ... 75
வழியா மொழிய வந்தனம் குருவாய் ..
ஆணவக் கடற்குள் அலைபடு துரும்பும்,
பூணூறு மாயைப் புலிவாய்ப் பசுவும்,
கருமச் சூறைக் காற்றுறு சருகும்
தரும (ம்) இச் சுழலைச் சார்ந்திடும், எளியநின்        ... 80
வருத்தம் குறித்து வருந்தேல் .. உனக்குத்
திருத்தகும் உணர்வு செப்ப வேண்டி
வந்தனம், முத்தி வழங்குதும் என்றான் ..
அந்தநல் மொழிகேட் (டு) அன்பொடும் துதிப்பேன்
கற்பக வனம்போல் கமழ்பூங் காவில்        ... 85
பொற்புற விளங்கும் பொலன்மணிக் கனகப்
பன்னக சாலையுள், பதுமபீ டிகைமேல்,
துன்னுபூந் தருக்கள் சூழ்கற் பகம்போல்,
சங்கமீன் நாப்பண் தயங்குவெண் மதிபோல்,
அங்கை கூப்பி அடியார்நின் (று) ஏத்த        ... 90
இனி (து) எழுந் தருளி, என்முகம் நோக்கிப்
புனிதநீர் ஆடப் போகென மொழிந்தான் ..
நீரிடை மூழ்கி, நெடும்கலை அணிந்து
சார்தலும், ஓமச் சடங்குகள் இயற்றி
வெண்ணீ (று) அணிந்து, விதிஎழுத்து அஞ்சும்        ... 95
தெள்நீர் மையினிற் செவியிற் புகட்டி,
அறு (கு) எருவுடன், கை அள்ளுநீ ருடன், என்
மறு (கு) உடல், ஆவி, வான்பொருள் கொண்டான்
பரவுசஞ் சிதம், நம் பார்வையால் ஒழிந்த,
விரவுமுன் பவங்கள், வினையுடம் (பு) அளவில் ..        ... 100
அத்தன் அருள், மேல் ஆகா மியங்கள்
பற்றில, நினது பண்புபோல் இருந்த ..
நம்பெரு வடிவை நாடுகென் (று) அருளித்,
தம் பொன் கரமலர், என் தலை தீண்டி ..
முழுநிலம் புரப்ப முடிசூட்டுவதுபோல்,        ... 105
செலுமணிப் பத (ம்) என சிரமிசைப் பொருத்திப்
பாத தீர்த்தம் பரிகல சேடம்,
ஆதரக் குழவிக் (கு) அன்னைபோல் அருத்தி ..
குருபதம் பணிதல், குஞ்சர முகனைக்
கருதல், சங்கற்பம், கங்கையின் பூசை,        ... 110
திருந்து முத்திரைகள், திக்கு பந்தனம், நீ (டு)
அருந்துயர் நீக்குப் அத்திர சந்தி,
தத்துவத் திரயம், தாளத் திரயம்,
சுத் (த) ஆசமனம், தொடுமிடம் தொடுகை,
கரமுடன் அங்கம், கருதிடு நியாசம்,        ... 115
விரவு தருப்பணம், விளங்நீ (று) அணிகை,
அஞ்செழுத் (து) ஓதி ஆதவற் பணிதல்,
விஞ்சும்ஆ கமத்து விதிமுறை முடித்துப்
பண்டையோர் நம்மைப் பரவுசொற் பாடல்
கொண்டு, நீ துதிகள் (கூறு) என விளம்பிப்        ... 120
பத்திகூர் விரதம் பயின்றிடின், நாலாம்
சத்திநி பாதம் தரும்எனப் பகர்ந்தான் ..
அன்னமிட் (டு) எவர்க்கும் அரும்பசி தீர்த்துப்
பன்னரும் சாலை, படித்துறைத் தடாகம்,
வசந்தார் அருந்தும் வாசநீர்ப் பந்தர்,        ... 125
நந்த வனங்கள் நலம்பெற அமைத்தே,
ஈங்கு இவை முதலா எண்ணான்கு அறமும்
தீங்கு இலா வண்ணம், செய்கென மொழிந்தான் ..
காலையில் எழுந்து கடிமலர் பறித்து,
மாலிகை தொடுத்து, மதிமுடிக் கடவுன்        ... 130
பூசனைக் (கு) உதவிப் புனிதஆ லயத்தின்
வாசல் விளக்கிட் (டு) அலகொடு மெழுக்கிட் (டு)
ஆறுகா லமும்சென் (று), அரன்பதம் இறைஞ்சி,
ஏறுளான் அடியார்க் (கு) ஏவல் பூண் (டு) ஒழுகுதல்,
இத்திறம் முதலா இயற்றுதல் சரியை,        ... 135
சுத்த சாலோக்கியம் துய்க்கும் என் (று) இசைத்தான்
பொய்வகை நீக்கிப், பூதம் முதலா
ஐவகைச் சுத்தி மெய்வகை விளக்கி,
மணம்பொலி கந்த வர்க்கமாம் மலர்கள்,
இணங்கு நல் தூபம், எழில்குலாம் தீபம்,        ... 140
தருநை வேந்தியம், தாம்பூலம் முதலாய்
வரும்உப சார வகைபல இயற்றி,
அகம்தவிர் உளத்தோ (டு) அகம்புறம் இறைஞ்சிச்
சுகம்கிளர் அங்கித் தொடுகடன் முடித்துப்
போற்றுறும் இலிங்க பூசனைக் கிரியை        ... 145
சாற்று சா மீப்பியம் தரும் எனப் பகர்ந்தான் ..
கட்டளை கப்பணம் கட்டளை யிட்டுக்
தட்டுறு மலர்தீர் சாதனம் ஒழிந்து,
கடுங்கொலை, வெறும்பொய், களவு, கள், காமம்
படும்பெயர் பஞ்ச பாதகம் தீர்த்துக்        ... 150
காமம், கோபம், கசடுறும் உலோபம்,
தீமன மோகம், சேர்மத மாற்சரியம் ..
ஈண்டிவை முதலா எண்ணில் பாவம்
பூண்டன ஒழியப் புந்திதந் தருளி ..
மன்னுகீழ் அரணி, வருத்தமில் உணர்வாய்ப்        ... 155
பின்னும்மேல் அரணி, பிரணவம் ஆகக்
கடையவே, ஞானக் கனல் எழும் என்றே
தடைப்படாப் பாச தகனம் செய்தான்,
அருளெனும் தலத்தில் அறிந்துகால் மடக்கி
இருளற இருக்கும் இயற்கையும் விண்டான் ..        ... 160
பன்னிரண் (டு) அங்குலம் பறிந்துடும் பிராணன்,
பின்னதின் நான்கும் பிரிந்துபோம் .. அதனால்
ஆயுளும் குறைந்திட் (டு), ஆக்கையும் தளர்ந்து
சாயும்என் (று) உரைத்துச் சாகா (து) இருக்க,
நாடிஓர் பத்தும் நாடி, நா டிகள்புக் (கு)         ... 165
ஓடிய வாயு ஒருபதும் தேர்ந்து,
சொன்ன நாடிகளிற், சுழுமுனை நடுவாம்
இன்னதின் பக்கத் (து), இடைபிங் கலையாம்
அக்கினி திங்கள் ஆதவன் கலைகள்
புக்கமுச் சரமும் போய்மீண் (டு) இயங்கும்,        ... 170
மூலகுண் டலியாம் உரகம் மூச்செறித்து,
வாலது மேல்கீழ் மண்டலம் இட்டுப்
படந்தனைச் சுருக்கிப் படுத்துறங் குவது,
நடந்து மேல்நோக்கி, ஞானவீ (டு) அளிக்கும் ..
மண்டலம் மூன்று மருவு தூண் புக அக்        ... 175
குண்டலி எழுப்பும் கொள்கையீ (து) என்றான்,
முன்ன (து) இரேசகம் முப்பத்திரண்டு ..
பின்னது பூரகம் பேசும்ஈ ரெட்டுக்
கும்பகம் நாலோ (டு) அறுபதாகக் கூறும்
தம்பமாத் திரையின் தன்மையும் உணர்த்தி ..        ... 180
மூலமே முதலா முடிநடு உச்சிப்
பால்அள வினும்நீள் மடுதுளை நோக்கி ..
மூலா தாரத்தின் முச்சுழிச் சுடரை ..
மேல்ஆ தாரத்தின் மெல்லெனத் தூண்டி
இருவழிக் காலும் ஒருவழி நடத்திக்,        ... 185
கருவழி அடைத்துக் கமலம் (ஆறு) உருவிப்,
பன்னிரண் (டு) அந்தம், பரிதியும் மதியும்
மன்னி ஒன்றான வண்ணமும் தெரிந்து ..
கமடம் ஐந் (து) அடக்கும் கருத்தெனப், பொறியின்
மமதைகள் அடக்கி, மனேலயம் ஆக்கி ..        ... 190
மூலக் கனலால் முழுமதி உருக்கிப்,
பாலைப் பருகும் பண்புதந் தருளி
இட்டகா மியமும், எண்ணெண் கலையும்,
அட்டமா சித்தியும் அன்புறக் கொடுத்துப்
பன்னிரு பட்சியும் பறவா வண்ணம்        ... 195
என்னுள்ளே நிறுந்தம் இயற்கையும் விண்டான் ..
மூலமே முதலா மூவிரு தலத்தின்
கோலமும், பூபிக் குறிகளும், அதன்பால்
ஐம்பதோ (டு) ஒன்றாம் அக்கர விதமும்,
பொன் பொலி கமலப் பூஇரு மூன்றும்,        ... 200
தாரக எழுத்தும், சார்பெழுத் (து) அஞ்சும் ..
வாரண முகவன் மலரோன், திருமால்,
வருத்தம்இல் உருத்திரன், மகேச்சுரன், சதாசிவன்
உருத்தெனிந் திடநம் உருவே ஆகும் ..
ஆறுமா முகத் (து) அமர்ந்ததும் இதுவே,        ... 205
வேறிலை என்று மெய்ம்மொழி செப்பி,
இலங்கும்ஆ யிரத்தெட் (டு) இதழ்த்தா மரைமேல்
துலங்கிடும் நடனச் சோதியும் காட்டி,
இருபத் தோரா யிரத் (து) அறுநூறாய்
மருவிநாள் தோறும் வளர்சுவா சத்தைச்        ... 210
சங்ங்என வாங்கிச், சமனுறக் கும்பித் (து),
அங்ங்என் (று) எழுபதபும் அசபையும் அருளிப் ..
பொருள், அருள், ஆன்மாப் பொருந்திடும் திரோதை
மருஇரு மலமாய் வயங்கும் அஞ்செழுத்தி (ல்),
திரோதையும் மலமும் திர்த் (து) அதனிடத்தில்        ... 215
வரோதையும் ஆன வாசியை நிறுவி,
வளம்பொலி சிவய வசிஎன் (று) உளத்தில்
விளம்புக .. நின்னை விளக்கும் ஆநந்த
மூத்தி அஞ்செழுத்து மொழிந்தனம் .. இதனைச்
சித்த சாந்தியினிற் செப்பென மொழிந்தான்        ... 220
வாசிவா என்ன வழங்குமூன் (று) எழுத்தும்
பேசுதல், முதிர்ந்த பே (று) என மொழிந்தான் ..
இன்பமாய் வாசி என்னும் ஈரெழுத்தில்,
அன்புறு மகிமை அதிசயம் என்றான் ..
சிஎழுத் (து) ஒன்றே சிந்தையிற் கருதத்        ... 225
தூயநல் சுடராய்த் தோன்றுவை என்றான் ..
விந்துவும் நாதமும் மேவிய வெளியிற்
சிந்தையை நிறுவிச் சிவன்வடி வாகித்,
தாக்குவை மூலம் .. நோக்குவை அதீதம்,
போக்குவை பிறவி, ஆக்குவை இன்பெனத்,        ... 230
தராப்புகு நாப்போல, சமனுற நிற்கும்
இராப்பகல் அற்ற இடத்தே இருத்தி,
நலம்படர் சோதி நடனகுஞ் சிதத்தான்
சிலம்பொலி கேட்கும் திறம்பா லித்தான் ..
மயல்பொறி புலன்வாய், மனம்புகு நனவில் ..        ... 235
இயற்றிடு தவங்கள், இமயநிட் டையதாம் ..
சார்பொறி விடுத்த சாக்கிரக் கனவு
சேர்தரு கருத்தால் செய்தவம் நியமயம் ..
நீங்காக் கரணம் நீங்கவே, நனவில்
தூங்காத் தூக்கச் சுழுத்திஆ சனமாம் ..        ... 240
அறிந்து தொண்ணூறும் ஆறும்வே (று) ஆக்கிப்
பிறிந்து, தற் கண்டு, பிரமமே தானாய்ச்
சாதனம் விடுத்த சாக்கிர துரியம் ..
பேதமற் (று) இருக்கை, பிராணா யாமம் ..
சான்றுசாக் கிரமபோய்த், தான்இருந் தமையும்        ... 245
தோன்றிடா (து), உலகைச் சுழற்றும் கால்போல்,
பறந்திடும் காலால் பரமறந் (த) அளவில்,
பிறந்திடும் அதீதம் பிரத்தியா காரம் ..
வான் எனும் அகண்ட வடிவுகண் (டு), எங்கும்
தான் என் (று) இருக்கை, தாரணை ஆகும் ..        ... 250
காட்சிகள் அனைத்தும் கண்ணதாய் விளங்கி,
ஆட்சியின் அமைந்த (து), அதுவே தியானம் ..
தற்பதம், தொம்பதம், சார்ந்திடும் உபாதி
கற்பனை தீரக் கண் (டு), அசி பதமாம்
சச்சிதா நந்த சமரச நிலைதேர்ந் (து)         ... 255
உற்றற்சி பதம்பெற் (று) உலங்குதல் சமாதி
மன்னிடு சாம மறைஉப நிடதம்
சொன்ன வாக்கியத்தின் தொகைஇதே .. ஞான
யோகஎட் (டு) அங்கம், உண்மைநீ உணர்த்தி,
ஏகசா ரூப்பியம் இதுஎன மொழிந்தான் ..        ... 260
சரியை கிரியை தருக்கமா யோகம்
சுருதியின் முறையே தொடங்கியா அனைத்தும்,
நான்எனும் போத நாட்டமே அன்றி,
ஈனம்இல் உணர்வுக் (கு), இன்பம் காணேன் ..
என்றுநான் வினவி இறைஞ்சலும் நகைத்து        ... 265
நன்றென மொழிவான், ஞானம், உரைக்கில்
பாச ஞானம், பகர்பசு ஞானம்,
ஈச ஞானம், என்னமூன் (று) உளவாம்
அதுகேள், பாசம் ஆவது ஆணவம்
மதிமயல் கன்மம், மாயை இரண்டும்,        ... 270
தெருமரல் காட்டும் கருமமும், திரோதையும்,
மருவிடும் பஞ்ச மலங்காண் .. இதனை
ஆசு, என உணரா (து) அகம்என இருக்கை
பாச ஞானப் பண்பது ஆகும்
தரும்பசு ஞானம் சாற்றுதும் கேண்மின்        ... 275
வரும்பவம் மூட்டும் மலம்ஐந்து .. அவற்றின்
ஆணவம் ஒன்றும் அகலா மையினால்,
காணுறும் விகடக் கருவிகள் தீர்ந்து,
தன்னை உணர்ந்து, தானே பிரமம்
என்னக் கருதி இருப்ப (து) ஆகும் ..        ... 280
பதிஞானத்தைப் பகருதும் .. அகம்கூர்
மதிஞா னத்தால், வரும்பவம் ஒழியா (து),
ஆகையால், அருள்புக் (கு) ஆணவம் ஒழிந்திட் (டு),
ஏகமாம இன்பத் (து) எய்துவ (து) ஆகும் ..
தத்துவம் முழுதும், சடம்உனைக் காணா (து),        ... 285
இத்தை நீ நடத்தற் (கு), இறைவனோ? அல்லை,
அறிவனும் அல்லை, அறியான் அல்லை
செறிஅருள் காட்டத், தேர்ந்துகாண் பவன்நீ ..
யாதுசார்ந் திடினும், யான்அது என்னும்
போதம்நின் (று) உணர்வு புகன்றிடிற் சிறிதாம் ..        ... 290
மறைந்திடும் மூல மலத்தினால், பாசச்
சிறைக்குள்ளே கிடந்து, தேகம்நான் என்று
வல்வினை புரிந்து மயங்கினை .. அந்தத்
தொல்வினைப் பயன்கள் சூட்டினம். இப்பால்
இருவினை ஒப்பு, மலபரி பாகம்        ... 295
திருவருள் பதிக்கத் தேடிவந் தனம்யாம் ..
மே (வு) ஒரு மலத்து விஞ்ஞான கலர்க் (கு),
ஓவறு முத்தி, உணர்வில் நின் (று) அளிப்போம் ..
பெரு (கு) இரு மலம்கொள் பிரளயா கலர்க் (கு),
மருவிநன் மூர்த்தி வடிவுகொண் (டு) அருள்வோம்,        ... 300
மும்மலம் உடைய சகலன்நீ மொழியின் ..
அமடமலம் நீக்கி ஆட்கொண் (டு) அருள,
மானைக் காட்டி மான்பிடிப் பவர்போல்,
மானுட வடிவாய் வந்தனம் .. தெள்நீர்
மீனதுபோல, விழியுற நோக்கி ..        ... 305
ஆன (து) ஓர்கமடம்போல், அகத் (து) உன்னிப் ..
பறவை போலப் பரிசம் செய்து ..
திறமிகு முந்நூல் தெளிவுரை பகர்ந்து ..
பக்குவத் (து) அடைவே பாலித் (து), அருள்நீ
புக்கிட வேண்டிப் போந்த (து) என் (று) இசைந்தான்        ... 310
பற்பல சமயப் பகுதீசேர் நிலையும்,
சொல்வகை மறப்பும், துகளற மொழிந்தான் ..
தெய்வம் சிவமே .. சிவனருள் சமயம்
சைவம், சிவத்தோடு சம்பந்தம் என்றான் ..
பூதம் பழித்துப் பொறியற உணர்த்தி,        ... 315
வாதமாம் கரண வல்லபம் நீக்கிப்,
பித்துறும் கலாதிப் பிணக்கு அறவிடுத்துச்
சுத்த தத்துவம் தூடணம் ஆக்கி ..
முப்பது முப்பது முப்தோ (டு) ஆ (று) எனச்
செப்பும் கருவிகள், சேரா (து) அகற்றித் ..        ... 320
துன்னுடும் அத்துவா சோ னைகண்டு,
தன்னை உணர்ந் (து) இருள் நீக்கி,
யாம்ஆம் உலகம் அனைத்தினும், சாடசி
நாமே என்னும் முனமும் கடந்திட் (டு),
அண்ட பிண்டம் யாவும் தோன்றா (து),        ... 325
உண் (டு) எனும் உணர்வூ (டு), உறக்கமும்விட்டு
விசுவக் கிராசம், வீ (று) உப சாந்தம்,
அசிபதம் குறிக்கும் ஆசையும் தீர்த்துக்,
கால்புகா இடந்தில் கறங்காத் தீபமும்,
மேல்விசை தீர்ந்து வீழ்ந்தபம் பரமும்,        ... 330
சித்திர வடிவும், திரைதீர் புனலும்,
ஒத்தவர் நிலைசார்ந் (து) ஒளி அருள்நோக்கி,
என் செயல் ஏதும் இல்லை என்று எய்து
தன்செயல் நோக்கிச் சார்கென மொழிந்தான் ..
சும்மாஇருக்கச் சொன்ன (து) ஓர் வார்த்தை,        ... 335
அம்மா அதிசயகி, ஆருடன் புகல்வேன்?
கரைசேர்த் (து) அருள்வான் கருணையை நோக்கி
இரைதேர்கொக் (கு) ஓத் (து) ஏ (சு) அறஇருந்தேன்
என்செயல் அகன்றேன் .. யான்அற, ஈசன்
தன்செயல் நடக்கும் தன்மையும் கண்டேன்        ... 340
ஆத்துமிகத்தோ (டு) அடைதரு பெளதிகம்
போற்றுதெய் வீகம்இவை புரிவதும் கண்டேன் ..
புலக்கணக் கதவு பூட்டினேன் .. சிந்தை
அலக்கண் தீர்ந்த அறிவையும் கண்டேன் ..
பொறிபுலன், கரணம், பொழிந்திடும் கலாதி        ... 345
அறிகரு விகள்போய், அடங் (கு) இடம் கண்டேன் ..
தாழும்என் இழப்பில், தயங்குறு விளக்கின்
சூழுறும் ஒளிபோல், துலங்குதல் கண்டேன் ..
பஞ்ச வருணம் படாம்விரித் ததுபோல்,
விஞ்சுபல் சோதி விளங்கிடக் கண்டேன்        ... 350
சித்திர படத்திற் சேர்பல வடிவம்
ஒத்த அனேகம், ஒளிக்குளே கண்டேன் ..
பஞ்சமூர்த் திகளும், பஞ்ச சத்திகளும்
விஞ்சைபோல் ஒளிக்குள் வெளிபடக் கண்டேன்
மண்ணெடும் கடம்போல் வரை, மாதிரங்கள்        ... 355
எண்ணில் புவனமும், என்னுளே கண்டேன்,
எழுவகைத் தோற்றத் (து) இயைந்தபல் உயிரும்,
வழுவறச் சோதி வான்இடைக் கண்டேன்
தன்னுள்ளே ககமும், சகத்துள்ளே யானும்,
பின்னமற் (று) இருக்கும் பெற்றியும் கண்டேன் ..        ... 360
பளிங்கு போலப் படரொளி விந்து,
விளங்குவெண் மதிபோல் வெளிபடக் கண்டேன் ..
பருதிபோலப் படரொளி தோன்றி,
ஒருபது நாதம் ஒலிக்கவும் கண்டேன் ..
அக்கினிபோலும், அனந்தமீன் போலும்        ... 365
தங்கபே ரொளியாய்ச் சராசரம் அனைத்தும்
புரந்தருள் அகண்ட பூரணம் ஆகிப்
பரந்தசெஞ் சுடரைப், பரையெனக கண்டேன்,
அருள்பரை ஒளிக்குள் அழுந்தும்அந் நேரம்,
உருக்கமும், கண்ணீர் ஒழுக்கம், திகைப்பும்,        ... 370
கம்பமும். புளகமும், களிப்புடன் நகையும்,
சிம்புள்போல் வலியும், சித்தியும் கண்டேன் ..
மேலுள விஞ்சை விதிநெறி விடுத்த
பாலன், உன் மத்தன், பக்குவம் கண்டேன்,
ஓங்கும் பரைக்குள், உள்ஒளி ஆகித்        ... 375
தேங்கும் ஆநந்தச் செழுஞ்சுடர் கண்டேன் ..
உள் ஒளிக் (கு) உவமை, ஒன்றும் காணேன் ..
விள்ளவும் தரமோ? மீமிசை விளங்கித்
தெளிபடும் சுடரைச், சிவமென் (று) உணர்ந்து,
களிபடும் ஞானக் கண்ணினால் கண்டேன் .. 380
பார்த்திடும் என்னைம் பசையற விழுங்க,
ஆர்த் (து), அதில் வீழ்ந்துற் (று), ஆநந்தம் ஆனேன் ..
தன்னைத் தந்தான் .. என்னைக் கவர்ந்தான்,
பின்னைப் பெரும்ஓர் பேற்றையும் காணேன் ..
சுயம்பிர காசம், சொரூபா நந்தம்        ... 385
இயம்புதற் (கு) அரிதாம், இன்பப் பெருக்கம்,
தாள்தலை போலும், கால்தலை போலும்
கூடலை என்னால் கூறவும் படுமோ?
பேய்பிடி யுண்டான் பெற்றி போலச்,
சாய்படு கருவிச் சங்கமும், நானும்,        ... 390
பகலோன் வெயிலிற் பாயிருள் விண்மீன்
சகமாய்க் கலந்த தன்மையும் பெற்றேன் ..
காந்தம் இரும்பும் கனல்படும் இரும்பும்,
வேய்ந்த இந்தனமும் வெந்நீர் உப்பும்,
குளிகைபோன் மதுரம் கொண்டநா என்னத்,        ... 395
தளிவிடா (து) என்னைத் தடுத்தாட் கொண்டான்,
விண்டேன் பிறப்பை .. வேதா கமத்தோர்
சண்டை தீர்ந்து சமரசம் ஆனேன் ..
திருமலி செந்தூர்ச் சேவல் பெருமான்,
நிருமல ஞாலம் நிகழ்த்தி, ஆட்கொண்ட (து)         ... 400
இவ்வணம் தமியேற் (கு) .. இருநிலப் பரப்பில்
அவ்வவர்க் (கு) அளிக்கும் அருள்நெறி உணரேன்,
ஆகையால், இந்த அருள்பெறல் வேண்டின்,
ஓகையால் திருச்செந் தூர்இடத் (து) ஏகித்
குமரவேள் சரணம் குறித்துமா தவத்தீர்.        ... 405
நிமலமெய்ஞ் ஞானம் நீவிரும் பெருவீர் ..
உத்தமர் ஆவீர் .. உண்மையீ (து) என்று
சிற்றம் பலவன் செய்யுளால் புகன்றான்.

நூற்பயன்

கருத்துற் இதளைக் கற்போர் கேட்போர்
திருத்தகம் அன்பால் தினந்தோரும் துதிப்போர்        ... 410
பெரும்பலன் இதனைப் பேசுதும் கேண்மின்
உறும்பலன் வேண்டும், உகத்தோரே.

பாவந் தீரும் .. பார்மிகு தருமம்,
மே (வு) இளம் பிறைபோய் மென்மேல் வளரும்,

துட்டதே வதைகள் தொட்டதும் .. வஞ்சர்        ... 415
இட்ட பில்லி இடர்களும் தீரும் ..

வாதம், பித்தம், வலிபடும் காசம்
சீதம் வெறுப்புத் தீரா நோய்கள்
வேதனை மிகுந்த வியாதிகள் எல்லாம்
ஆதவற் கண்டபனிபோல் அகலும்        ... 420

சாகா வரமும் தந்திடும் .. உடம்பிற்
போகாப் பீடை போக்கி ரட்சிக்கும் ..
வறுமை நீங்கும் வாழ்வுண் டாகும்.

செறிதரும் அட்டமா சித்தியும் கொடுக்கும்
சரியை, கிரியை, சார்ந்திடும் யோகம்,        ... 425
தெரிதரு ஞானமும் செறிந்து வாழ்குவரே.

அம்மா திருச்செந்தூ ரம்மானருணோக்கிக்
சும்மா லிருக்கை சுகம்.
       .....

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]