|


¾¢Õ §º ÌÕ Àð¼¡À¢Ã¡Áý | |
பாடல் ஆசிரியர் அறிமுகம்
இந்நூலின் ஆசிரியர் திரு சே குரு பட்டாபிராமன் அவர்கள் திருவையாற்றில்
பிறந்து குடந்தையில் நேடிவ் பள்ளியிலும் பின்னர் அரசினர் கல்லூரியிலும்
கல்வி பயின்றவர். பள்ளி நாட்களிலே தனது தாயாரிடம் முறைப்படி கர்நாடக
இசை கற்று மேடையேறி கச்சேரிகளும் செய்தவர். தமிழில் ஆர்வம் காரணமாக
இள வயதிலே பாடல்கள் புனையும் திறன் பெற்று பல தெய்வப்பாடல்களைப்
பாடிப் பரிசுகள் பெற்றிருக்கிறார். ரிஷிகேஷில் ஸ்வாமி சிவானந்தரின்
முன்னிலையில் திறம்படப் பாடி "ஸங்கீத ஜோதி" என்ற பட்டத்தினை 1958 ம்
ஆண்டிலே பெற்றார். தமிழ்நாடு அரசுப்பணியில் பள்ளி ஆய்வாளராகவும்
பின்னர் பல்வேறு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும்
பணி புரியும் போது எந்த ஊரில் பணி புரிந்தாலும் அந்த ஊரின் முக்கிய
கடவுளர்களின் மீது பக்திப்பாடல்கள் பல பாடியிருக்கிருக்கின்றார். அவற்றில்
முருகன் மீது அவர் இயற்றி மேடைகளில் பாடிய சில பாடல்களை
தமிழன்பர்களுக்காக இச் சிறிய புத்தகமாகத் தொகுத்துள்ளேன்.
ஓய்வு பெற்ற பின்னர் குடந்தையில் வசித்துவரும் எனது தந்தையார் திரு
பட்டாபிராமன் அவர்களின் பாடல்கள் பாட எளிதாகவும் தக்க தாள
அமைப்புடன் வனப்பு மிகுந்ததாக இருக்கின்றன என்பது இசை அறிஞர்களின்
கருத்தாக அமைந்துள்ளதால் இப்பாடல்களைத் தொகுத்து இணையத்தின் மூலம்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
தொகுப்பாசிரியர் சே ப சந்திரசேகரன்
இத்தொகுப்பைப்பற்றி ...
எனது தந்தையார் எழுதிய தமிழ்ப்பாடல்களை இணையத்தின் வாயிலாக
தமிழிசையன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி பிள்ளையார் பாடல்களோடு
துவங்கியது. சில நாட்கள் முன்பு "அருள்மிகு விநாயகர் பாடல்கள்" என்ற
தலைப்பில் சிறு மின் புத்தகம் ஆனைமுகன் புகழைப்பாடி வந்தது.
ஆனைமுகனுக்குப்பின் ஆறுமுகன் புகழ் பாட இத்தொகுப்பு வெளிவருகிறது.
இத்தொகுப்பில் மொத்தம் 9 பாடல்கள். பழனி, திருத்தணி, திருச்செந்தூர் என்று
அறுபடை வீடுகளையும் பாடி பக்தர்கள் திருப்தியடையலாம். நட்டக்கல்
(கோத்தகிரியிலிருந்து சுமார் 5 கிமீ) சக்தி பாலமுருகனைக்கூட தரிசிக்கலாம்.
"வடிவேல் முருகா" என்று துவங்கி "அழகுத்தெய்வம்" என்ற காவடிச்சிந்தோடு
நிறைவடைகின்ற தொகுப்பில் எல்லாப்பாடல்களும் முருகன் அருளைப்
பாடினாலும் "அழகுத் தெய்வம்" பல்வேறு ஊர்களில் முருக பக்தர்களால் இன்றும்
பாடப்படுகின்ற செய்தியை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
கலியுக தெய்வம் கந்தனைப் பாடி நிற்கும் மலர்கள் நிறைந்த வனத்தில் இம்மலர்
அவனையே நினைந்து இத்தருணம் கை கூப்புகின்றது.
தொகுப்பாசிரியர் சே ப சந்திரசேகரன் புணே. ஆகஸ்ட் 30, 2009
குறிப்பு: இம்மின் புத்தகம் தங்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும். வணிகநோக்கினில் அச்சிடவோ வினியோகிக்கவோ பாடலாசிரியரை எழுத்து மூலம் அணுகவும். நன்றி.
In case of problems download fonts from www.azhagi.com saiIndira font installer can be downloaded free. Or contact@azhagi.com for help.
| |